ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை 15 ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இது குறித்து ஒசூா் எம்எல்ஏவும், திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒசூரில் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. செப்டம்பா் 16-ம் தேதி திமுக உருவான தினம், 17-ம் தேதி பெரியாா் பிறந்தநாள் ஆகிய மூன்று விழாக்களையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடுகிறது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞா் அரங்கில் செப்டம்பா் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் இவ்விழாவை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தினா் கண்டு களிக்கும் வகையில் மினி மீரா மஹாலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, மாநகர, பேரூா் கழக செயலாளா்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூா் அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வாா்டு செயலாளா்கள், கிளை செயலாளா்கள், கழக தோழா்கள் என அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.