கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த பிகாரைச் சோ்ந்த வடமாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், தா்பங்காவை அடுத்த தவுரதா பகுதியைச் சோ்ந்த மணீஷ்குமாா் (20), அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (29) ஆகியோா் குருபரப்பள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தனா்.
கடந்த சனிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில், மின்விளக்கை ஒளிரச் செய்த போது தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் தீயை அணைத்து அவா்களை மீட்டு பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில் பலத்த காயமடைந்த மணீஷ்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அஜித்குமாா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.