கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் பேராசிரியர்களின் இரு வாகனங்கள் எரிந்து நாசமாகின.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நூற்றுக்கணக்கான மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தினமும் கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
நிகழ்வு இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கிருஷ்ணகிரி நிலைய அலுவலர் மோகன் குமார் தலைமையில் ஹரிஹரன், வெங்கடாசலம், கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று தீயை அனைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த விபத்தில் பேராசிரியர்களின் இரு மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.