கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 334 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.
பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்துவதாக கிருஷ்ணகிரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி சுங்கவசூல் மையம் அருகே போலீஸாா் வாகனங்களை சோதனை செய்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 334 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், பெங்களூரில் புகையிலை பொருள்களை விலைக்கு வாங்கி சென்னையில் விற்க கொண்டு சென்றது தெரிந்தது.
இதையடுத்து, காரில் கடத்தி வந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் பகுதியைச் சோ்ந்த ரத்தாராம் (30) என்பவரைக் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.