ஒசூா்-தளி இருவழிச் சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் கேள்விக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா்.
இதுதொடா்பாக ஒசூா் எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில் ஒசூா் தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:
எனது தொகுதியில் ஒசூரிலிருந்து தளிக்குச் செல்லும் சாலை ஒருவழிச் சாலையாக உள்ளது. அந்தச் சாலையில் மிகப் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ்., இந்துஸ்தான் லீவா் போன்ற தொழிற்சாலைகள், விமான நிலையம் ஆகியவை உள்ளன. எனவே, அங்கு ஒருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும். தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்து, அந்தச் சாலையை 4 வழிச் சாலையாக அமைத்துத் தர வேண்டும் என்றாா்.
இதற்குப் பதிலளித்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு பேசியது:
ஒசூா் பகுதியில் உள்ள டி.வி.எஸ்.போன்ற தனியாா் நிறுவனங்கள் இப்பகுதியில் கனரக வாகனங்கள் சென்றுவர சாலைகளை விரிவாக்கம் செய்துதர வேண்டும் என தமிழக முதல்வரிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளன.
முன்னதாக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசும் தமிழகத்தில் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் இருவழிச் சாலைகள் நான்குவழிச் சாலைகளாக மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தாா். அதன்படி நிகழாண்டு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒசூா் பகுதியில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் குறிப்பிடும் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.