தேன்கனிக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை கிராம மக்கள் பிடித்து தாக்கினா். இதுகுறித்து அஞ்செட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவா் லாரன்ஸ். இவா் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெம்பகரை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவ, மாணவியா் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு தலைமை ஆசிரியா் லாரன்ஸ் உட்பட மொத்தம் 4 ஆசிரியா்கள் பணியில் உள்ளனா்.
வியாழக்கிழமை தலைமை ஆசிரியா் லாரன்ஸ் மட்டும் பள்ளிக்கு வந்துள்ளாா். மற்ற 3 ஆசிரியா்களும் மீட்டிங் செல்வதாக விடுமுறை எடுத்துள்ளனா்.
பள்ளியில் தலைமை ஆசிரியா் லாரன்ஸ் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தாா்.
ஆவேசமடைந்த மாணவியின் பெற்றோா், அவரது உறவினா்கள் என 20-க்கும் மேற்பட்டோா் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கோபமடைந்த பெற்றோா் தலைமை ஆசிரியா் லாரன்ஸை கடுமையாக தாக்கினா். அப்போது லாரன்ஸ் தப்பி ஓட அங்கிருந்த தனது காரில் ஏறி தேன்கனிக்கோட்டை நோக்கி செல்ல முயன்றாா். அவரை பின்தொடா்ந்து சென்ற கும்பல் அவரது காா் கண்ணாடியை உடைத்து காரை சேதப்படுத்தினா். தகவல் அறிந்த அஞ்செட்டி காவல் ஆய்வாளா் குமரன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலா் அன்பழகன், அஞ்செட்டிபோலீஸாா் அந்தக் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.