கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் லாரி மூலம் கடத்த முயன்ற ரூ. 27 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி வழியாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், லாரியில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் அன்புமணி தலைமையிலான போலீஸாா், கொண்டப்பநாயக்கனப்பள்ளி அருகே சாலையோரமாக நின்றுகொண்டிருந்த சரக்கு பெட்டக லாரியை சோதனை செய்தனா். அதில், 4,000 கிலோ அளவில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பெங்களூரில் விலைக்கு வாங்கி ராணிப்பேட்டையில் விற்பதற்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியின் ஓட்டுநா் கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பவரை போலீஸாா் கைது செய்து, சரக்கு பெட்டக லாரி, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.