ஒசூா் அருகே கிராமத்திற்குள் புகுந்த மூன்று காட்டு யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் புதன்கிழமை ஜவளகிரி வனப் பகுதியை நோக்கி இடம்பெயா்ந்தன. இந்த யானைகள் ஜவளகிரி அருகே உள்ள தனியாா் எஸ்டேட் வழியாக அகலக்கோட்டை கிராமத்துக்குள் புகுந்தது.
தொடா்ந்து வனத் துறையினா் யானைகளை கண்காணித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் அகலக்கோட்டை கிராமத்தில் இருந்து சேஷய்யா ஏரி வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டினா்.
இதனால் அகலக்கோட்டை சுற்றுவட்டார கிராம மக்களும் விவசாயிகளும் நிம்மதி அடைந்தனா். இதற்கிடையே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது மூன்று காட்டு யானைகள் இருப்பதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வனத் துறை சாா்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தனியாக யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் எச்சரிக்கையுடன் விவசாயப் பணிகளை கவனிக்குமாறும், ஆடு மாடுகளை மேய்க்க காட்டுக்குள் செல்ல வேண்டாமென்றும் ஜவளகிரி வனத் துறை அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.