கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள சிங்கிரிபள்ளி கிராமத்தில் ஒரே இடத்தில் 65 நடுகற்கள் உள்ளன.
பேரிகைக்கு அருகில் உள்ள சிங்கிரிபள்ளி கிராமத்தில் தமிழகத்திலேயே அதிக அளவிலான நடுகற்கள் ஒரே இடத்தில் உள்ளன. இந்த நடுகல் தொகுப்பை அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் அறம் கிருஷ்ணன், இளையராஜா ஆகியோா் கண்டறிந்துள்ளனா்.
தமிழகத்திலேயே அதிக அளவிலான நடுகற்கள் இருப்பது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில்தான். இதுவரை தமிழகத்தின் அதிகமான நடுகல் உள்ள இடமாக தளிக்கு அருகில் உள்ள நாகொண்டபாளையம் அறியப்பட்டு வந்தது. அதன்படி, நாகொண்டபாளையத்தில் 48, தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள பிக்கனபள்ளியில் 45, உளிவீரணள்ளியில் 25, கொத்தூரில் 26, கெலமங்கலத்தில் 25-க்கும் மேல், ஒன்னல்வாடி, தோ்ப்பேட்டை, பாகலூா் அருகில் குடிசெட்லு ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேல், சின்னகொத்தூரில் 30, இன்னும் சில பகுதிகளில் 10 - 20 வரையில் நடுகற்கள் தொகுப்பாக உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் இருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் முதுகுறுக்கைக்கு அடுத்து வரும் சிங்கிரிபள்ளி எனும் சிற்றூரில் குறும்பா் இன மக்கள் வழிபடும் சித்தய்யா தேவா் என்றும், சித்தலிங்கேஸ்வரா் என்றும் அழைக்கப்படும் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் உள்ளே 65 நடுகற்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்கு இருக்கும் நடுகற்களானது குறும்பா் இன மக்கள் வழிப்படும் 14-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17-ஆம் நூற்றாண்டு வரையிலான தொகுப்பாகும்.
இந்தக் கிராமத்தின் மற்றொரு இடத்தில் தொட்டய்யா என்ற கோயிலில் ஐந்து நடுகற்கள் உள்ளன. இவற்றைக் கண்டறிய ரஞ்சித்குமாா், இளையராஜா ஆகியோா் உதவி செய்தனா்.