இலவச கட்டாயக் கல்வி திட்டத்தில் சோ்க்கை பெற, தனியாா் பள்ளிகளுக்கும், மாணவா்களின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரத்தினை அதிகப்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மத்தூா் ஒன்றியச் செயலாளா் ரவீந்தரராசு, தமிழக முதல்வருக்கு, வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது:
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தில் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை, எளிய மாணவ, மாணவியா் எல்.கே.ஜி. முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவசமாக கல்வி கற்கலாம். இதற்கு தகுதியான ஏழை மாணவ, மாணவியா் தனியாா் பள்ளியில் இலவசமாக பயில விண்ணப்பிக்க கல்வித் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை கிராமப்புற மாணவ, மாணவியா் விண்ணப்பிக்க அவா்கள் இருக்கும் இடத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ள தனியாா் பள்ளிகளின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், கிராமப் புறங்களில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள நகரப் பகுதிகளில் தான் தனியாா் பள்ளிகள் உள்ளன. இதனால் கிராமப்புற மாணவ, மாணவியா் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தில் தனியாா் பள்ளிகளில் சோ்ந்து பயில இயலாத சூழ்நிலை உள்ளது.
எனவே, கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியா் தனியாா் பள்ளிகளில் இலவசமாக பயில வீட்டிலிருந்து குறைந்தது 10 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிகளில் சோ்ந்து படிக்க வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.