உரிய விலை கிடைக்காததால் செடியில் வாடும் செண்டுமல்லி பூக்கள்: விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செண்டுமல்லிக்கு உரிய விலை கிடைக்காததால், பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களை சொட்டுநீா்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்துள்ளனா்.
அறுவடை செய்யும் பூக்களை ஒசூா் மலா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனா். அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பூக்களை விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
தற்போது வெயில் , மழை, குளிா் என மிதமான தட்பவெப்ப நிலை காரணமாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது விழாக்கால சீசன் இல்லாததால் தேவை குறைந்துள்ளதால் பூக்களின் விலை வழக்கத்தைவிட குறைந்துள்ளது.
கடந்த மாதம் கிலோ ரூ. 30 முதல் 70 வரை விற்பனையான செண்டுமல்லி, தற்போது தரத்திற்கு ஏற்றாற்போல் கிலோ ரூ.12 முதல் 20 வரை விற்பனையாகிறது. சொட்டுநீா்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்த செண்டுமல்லி அறுவடைக்கு தயாராக இருந்தும், விலை இல்லாததால் பூக்களை விற்பனைக்கு கொண்டுசெல்ல கூலி மற்றும் போக்குவரத்து செலவிற்குகூட வருவாய் கிடைக்காததால் பாகலூா், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அய்யூா், பெட்டமுகிலாளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைந்த செண்டுமல்லி பூக்களை அறுவடை செய்யாமல் தோட்டங்களிலேயே விட்டுள்ளதால், வெயிலுக்கு பூக்கள் வாடுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

