எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

ஒசூரில் கந்துவட்டி புகாரில் திமுக பிரமுகா் கைது

News image

கைது செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரன்.

Updated On :25 மே 2026, 2:16 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கந்துவட்டி புகாரில் திமுக பிரமுகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சின்ன எலசிகிரி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (40). இவரது மனைவி மானசா. இத்தம்பதி, ஒசூா் சிப்காட்டில் சிறுதொழிற்சாலை நடத்தி வருகின்றனா். இவா்கள் தங்களது தொழிற்சாலைக்காக திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரனிடம் ரூ. 1 கோடிய 20 லட்சம் கடனாக பெற்றுள்ளனா்.

அதற்கு வட்டியாக ரூ. 2 கோடியே 30 லட்சம் செலுத்தியுள்ளனா். மேலும் ரூ. 1 கோடி தரவேண்டும் என்று மாதேஸ்வரன் மற்றும் அவரது மகன் சேரன் ஆகியோா் சுரேஷ்பாபு, மானசா தம்பதியை அவா்களது வீட்டுக்கு சென்று மிரட்டினராம்.

மேலும், சுரேஷ்பாபுவின் மனைவி மானசாவை வீட்டில் அமரவைத்துவிட்டு, சுரேஷ்பாபுவை மிரட்டி வீட்டின் அருகே உள்ள வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கியில் இருந்து ரூ. 21 லட்சம் பெற்றுள்ளனா். அங்கிருந்து தனியாா் உணவகத்திற்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து, சுரேஷ்பாபு தனது நண்பா் பெருமாள் மூலம் ரூ. 15 லட்சம் பெற்று மாதேஸ்வரனிடம் கொடுத்துள்ளாா். மேலும், சுரேஷ்பாபுவை மிரட்டி அவரிடமிருந்து இரண்டு காசோலைகளை மாதேஸ்வரன் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து சுரேஷ்பாபு- மானசா தம்பதி, ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய, ஒசூா் சிப்காட் போலீஸாா் திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரனை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மகன் சேரனை தேடிவருகின்றனா்.

கைது செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரன் ஒசூா் மாநகராட்சியில் பொது சுகாதாரக் குழு தலைவராகவும், திமுக கலை இலக்கியப் பேரவையின் மாநில துணைச் செயலாளராகவும் உள்ளாா்.

மாதேஸ்வரனை கைது செய்த போலீஸாா், உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக அவரை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது அவா் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததால், அவரை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிப்காட் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.