வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து, கோழிப் பண்ணையாளரிடம் ரூ. 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்-மோகனூர் சாலை மகரிஷி நகரைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் வீட்டிற்கு, வியாழக்கிழமை காலை 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்துள்ளனர். தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி அடையாள அட்டையை காண்பித்து வீட்டிற்குள் புகுந்து அவர்கள், வருமான விவரங்கள் குறித்த ஆவணங்களை கோரியதோடு, பணம், நகை கையிருப்பு விவரங்களையும் கேட்டுள்ளனர்.
கோழிப்பண்ணை உரிமையாளர் இதை நம்பி வீட்டில் ரூ. 40,000 மட்டுமே இருப்பதாகக் கூறி பணத்தை அந்தக் கும்பலிடம் கொடுத்துள்ளார். உடனடியாக அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி, காரில் ஏறிச் சென்றுவிட்டனர். இதன்பிறகே வந்தவர்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் இல்லை என கோழிப்பண்ணையாளருக்குத் தெரியவந்தது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய போலீஸார், பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்கவில்லை. இதனால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். அதே சமயத்தில் மற்றவர்கள் இதுபோல் ஏமாற்றப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு நகரில் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.