அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் நவலடி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க மாவட்ட தலைவர் நல்லுசாமி, தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குப்புசாமி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டச் செயலர் கார்த்திகேயன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ ஓய்வூதியத் திட்டத்தினை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தமிழக அரசில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். அரசுத் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் வாகன வசதி ஏற்படுத்துவதுடன், காலியாக உள்ள ஓட்டுநர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே பணியமர்த்த வேண்டும்.
தமிழக அரசு அலுவலர்களுக்கு தொழில் வரி ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.