8 இடங்களில் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள்:  உழவர் குழுக்கள் விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் வகையில் நாமக்கல்

வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் 8 இடங்களில் இயந்திர மையங்கள் அமைக்கப்படவுள்ளன.  இந்த மையங்களை அமைக்க உழவர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்திட நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் 2016-2017ஆம் ஆண்டு முதல் 2019-20ஆம் ஆண்டு வரையில் 2,500 ஏக்கர் கொண்ட மானாவாரி நிலத்தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு,  பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் ரூ.8.02 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
2017-18ஆம் நிதியாண்டில், இத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி,  அதிக லாபம் பெறும் வகையில், மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் 75 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. 
நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத் திட்டத்தின் கீழ் மானாவாரி தொகுப்புகளிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்காக,  மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்துக்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம்,  இதில் எது குறைவோ அத் தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.  மீதமுள்ள 25 சதவீதத் தொகை உழவர் உற்பத்தியாளர் குழு சேர்ந்து செலுத்த வேண்டும். 
 இத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சின்னமணலி மற்றும் புதன்சந்தை ஆகிய இடங்களில் மதிப்புக்கூட்டும் இயந்திரம் அமைக்கப்பட்டு,  பல்வகை எண்ணெய் பிரித்தெடுக்கும் கருவிகள் (மரச்செக்குகள்)  உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டு, லாபகரமான முறையில் இயங்கி வருவதால்,  விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.   பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இந்த மையங்களை அணுகி மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
   நாமக்கல் மாவட்டத்தில் 8 மதிப்புக் கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.  எனவே, இத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிடம் அளிக்க வேண்டும்.
  மேலும் விவரங்களுக்கு நாமக்கல் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்,  உதவி செயற்பொறியாளர், திருச்செங்கோடு உதவி செயற்பொறியாளர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com