பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காயின் விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்துக்கு தகுந்தாற் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,362 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.69 பைசாவுக்கும், குறைந்த பட்சமாக ரூ.78.69 பைசாவுக்கும், சராசரியாக ரூ.80.19 பைசாவுக்கும் ஏலம் போனது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 552 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.09 பைசாவுக்கும், குறைந்த பட்சமாக ரூ.78.68 பைசாவுக்கும், சராசரியாக ரூ.80.10 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.38 ஆயிரத்து 248 க்கு வர்த்தகம் நடைபெற்றது. கொப்பரை தேங்காயின் வரத்து குறைந்தும், சிறிது விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.