போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் சிந்தனை, செயல் அனைத்தும் உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குநர் சி.சைலேந்திரபாபு கூறினார்.
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் சார்பில், "உங்களாலும் அரசுப் பணிகளில் சாதிக்க முடியும்' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு, புத்தாக்க நிகழ்ச்சியில், அவர் பேசியது:
ஆற்றலும், துடிப்பும் மிக்க இளைஞர்கள் எதிர்காலத்துக்கு நன்றாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான சாதனை தளத்தை உருவாக்கிக் கொள்ளும் முக்கியமான காலம் கல்லூரிக் காலம்தான்.
அரசுப் பணிக்களில் சேரக் கூடிய வயது, கல்வித்தகுதி போன்ற அனைத்து தகுதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுள்ள கல்லூரி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அரசுப் பணிக்குச் செல்ல விரும்புவோர் நல்ல நோக்கத்தை கொண்டு செயல்பட வேண்டும்.
ஐஏஎஸ் போன்ற தேர்வை பட்டதாரிகள் 6 மாதங்களில் தயார்படுத்திக் கொண்டு எதிர்கொண்டு விடலாம்.
தொழில்நுட்பம், வரலாறு, விளையாட்டு, பொருளாதாரம், அரசியல்,பொது அறிவு போன்றவற்றிலும் திறமையை வளர்த்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்திலும் வல்லவர்களாகப் புலமை பெற்றவர்களாகத் திகழ வேண்டும்.
செய்தித்தாள்கள், புத்தகங்கலை வாசித்து அறிவையும், திறமையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். தனித்திறமைகளை வெளிப்படுத்திட வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் நேர்மையான அரசுப் பணியாளர்களாகப் பிற்காலத்தில் உயர வேண்டும் என்றார்.
விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். முதலாமாண்டு பொறியியல் துறை மாணவி ஜெ.ஐஸ்வர்யா வரவேற்றார்.
கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, பாவை காலேஜ் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் ஜே.சுந்தரராஜன், பாவை ஐஏஎஸ் அகாடெமியின் தலைமை அதிகாரி பெரியண்ணப் பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.