மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் பள்ளி மாணவர்கள் 200 பேர் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான வரும் 15ஆம் தேதியன்று இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளும் வெள்ளிக்கிழமை முதல் வரும் 15ஆம் தேதி வரை அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேலும், பள்ளிகள் அளவிலும், மாவட்ட அளவிலும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி, அறிவியல் கண்காட்சி, பொன்மொழிகள் சொல்லுதல் போட்டி நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் 50 பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் குமரேசன், மலர்க்கண்ணன், ஜெயமுருகன், செல்வ செந்தில்குமார், சித்ரா, கந்தசாமி உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.