சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாமக்கல்லில் இந்து அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆன்மிக இந்து சமயப் பேரவை மற்றும் இந்து உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து உணர்வாளர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநித்ய சேவானந்தா என்ற சந்திரன் தலைமை வகித்தார். ஆன்மிக இந்து சமயப் பேரவை கெளரவத் தலைவர் சோழாஸ் ஏகாம்பரம், மணி, சின்னுசாமி, ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கள்ள உறவு குறித்த வழக்கில் குடும்ப வாழ்க்கை முறையை சீரழிக்கும் விதமாக அளித்துள்ள தீர்ப்பு, ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் தீர்ப்பு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கம் எழுப்பினர். இந்து சமயப் பேரவை பொதுச் செயலர் எஸ்.முத்துசாமி, பொறுப்பாளர் மாதவக்குமார், வழக்குரைஞர் மனோகரன், இந்து முன்னணி அமைப்பாளர் இளமுருகன், பாஜக மாவட்டத் தலைவர் என்.கே.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.