திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனமும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் இணைந்து நடத்திய மாபெரும் அறிவியல் கண்காட்சியின் நிறைவு விழா விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இக் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்.பி.தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேருரையாற்றினார். சத்துணவு மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா சிறப்புரையாற்றினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.ஆசியா மரியம் வாழ்த்துரை வழங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் திருச்செங்கோடு, பவானி மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
மொத்தம் 752 கண்டுபிடிப்புகள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 312 பள்ளிகளைச் சார்ந்த 19,000 மாணவிகள் பார்த்து பயனடைந்தனர்.
இந்தக் கண்காட்சியில் திருச்சி ராகவேந்தரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், மகேந்ரா பொறியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தையும், செல்வம் பொறியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
அமைச்சர் பி.தங்கமணி தனது சிறப்புரையில், "புதிய விஞ்ஞானிகளை கண்டறியும் முயற்சியாக இந்த கண்காட்சி உள்ளது; கண்டுபிடிப்புகளை செயல்வடிவமாக மக்களுக்கு கொண்டு செல்ல தேவைப்படும் உதவிகளை அரசு சார்பில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தனது சிறப்புரையில், " அனைத்து கண்டுபிடிப்புகளையும் ஆராய்ந்து அதை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலிக்கும்" என்று கூறினார்.
இந் நிகழ்ச்சியில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர். மு. கருணாநிதி தலைமையுரையாற்றினார். மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போது விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் டாக்டர் விஸ்வநாதன் திட்ட உரையாற்றினார். முன்னதாக தலைமை நிர்வாகி சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றினார். சேர்க்கை பிரிவு இயக்குநர் வரதராஜன் நன்றி கூறினார்.
விழாவில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கண்காட்சி மற்றும் விழா ஏற்பாடுகளை விவேகானந்தா கல்வி நிறுவன முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.