ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். இயக்குநர் கே.கே.ராமசாமி வரவேற்றார். தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். இவ் விழாவில் புது தில்லி ஏ.ஐ.சி.டி.இ., முன்னாள் உறுப்பினர் செயலர், சென்னை ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் குன்சேரியா. பி.ஐசக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
பட்டம் என்பது நம் கல்வியின் முடிவு அல்ல, கற்றலின் ஆரம்பமாகும். வாய்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் உங்கள் அடியை எடுத்து வைக்கிறீர்கள். எனவே நீங்கள் உங்கள் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் மயமான நம் அன்றாட நடைமுறை வாழ்க்கையை கூட மிக, மிக எளிதாக்கும் வகையில் நவீன கருவிகளும், ரோபோக்களும் உருவாகிக் கொண்டிருக்கும் நம் சமூகச் சூழலில் அதற்கேற்றவாறு உங்களை மேம்படுத்திக் கொண்டு உங்களின் தனித்துவமான திறமைகளை புதிய கண்டுபிடிப்புகளாக மாற்றம் செய்யுங்கள்.
அதே சமயம் தற்கால நவீன உலகில் உங்களின் அடுத்த தலைமுறையினரை சரியான பாதையில் வழி நடத்துவதும் உங்களின் கடமையாகும். மேலும் வித்தியாசமான உயர்ந்த சிந்தனையுடன் செயல்பட்டு, நாட்டினை வளர்ச்சியடையச் செய்யும் புதிய தொழில்களை தொடங்குவதற்கு முற்படுங்கள். உங்கள் தொழில் வெற்றிபெற எப்பொழுதும் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு, தொடர் கற்றல் மனப்பான்மையோடு, ஒருங்கிணைந்து கற்கும் பழக்கத்தை மேம்படுத்துங்கள். நீங்கள் சந்திக்கும் வாய்ப்புகளை எப்பொழுதும் தவற விடாதீர்கள் என்றார்.
விழாவில், பங்கேற்ற 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டம் மற்றும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் வாங்கிய மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கினார். துறைவாரியாக முதல் இரண்டு ரேங்குகளைப் பெற்ற மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களும் வழங்கப்பட்டன.
விழாவில் கல்வி நிறுவன துணைத் தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், துணைச் செயலாளர் என்.பழனிவேல், பொருளாளர் எம்.இராமகிருஷ்ணன், முதல்வர் எம்.பிரேம்குமார், இயக்குநர் - சேர்க்கை கே.செந்தில், இயக்குநர் வேலைவாய்ப்பு- எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.