பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் 7 பவுன் தாலிக் கொடியை பறித்துச்சென்ற மர்ம நபரை பரமத்தி வேலூர் போலீசார் தேடிவருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மளிகை கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த நகையை பறித்தபோது 3 பவுன் நகை மட்டும் அறுந்து கீழே விழுந்துள்ளது. மீதமுள்ள 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்துச்சென்றுள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன் பரமத்தி வேலூர் சக்திநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் நகையை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர் திருட்டைத் தடுக்கும் வகையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.