விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் சம்பிரதாயத்துக்காகவே நடத்தப்படுகிறது. கூட்டத்தில் தெரிவிக்கப்படும் எந்த கோரிக்கைக்கும் உரிய பதில், நிவாரணம் கிடைப்பதில்லை என குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பால் பிரின்ஸி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சேலம் ஆவின் தலைவர் சின்னுசாமி, வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி.பாலமுருகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ரா.சுப்ரமணியம், மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்:
சுந்தரம்: நாமக்கல் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்திய, பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகள் சிலருக்கு இதுவரை காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படவில்லை.
பெரும்பாலான விவசாயிகளுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே காப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் இல்லை. கொல்லிமலையில் இருந்து மழை நீர் காளப்பநாயக்கன்பட்டி வரை பல்வேறு ஏரி, குளங்களுக்கு நீர் ஆதராமாக உள்ளது. கொல்லிமலையில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி வரையிலான வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும். ஓமசமுத்திரம் ஏரியில் அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால், முழுமையாக அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது.
சார் -ஆட்சியர்: ஓம சமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்புகள் இன்னும் ஒரு வார காலத்தில் முழுமையாக அகற்றப்படும்.
பெரியதம்பி: நாமக்கல் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துரைசாமி: நிகழாண்டில் நிலக்கடலை பயிரிட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்க்க வேண்டும்.
சந்திரசேகர்: நாமக்கல் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வங்கியாளர்கள், விவசாயிகள் அடங்கிய குறைதீர்க் கூட்டத்தை நடத்த வேண்டும்.
சரவணன்: குறைதீர்க் கூட்டம் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுகிறது. இங்கு தெரிவிக்கப்படும் எந்த கோரிக்கைக்கும் தீர்வு கிடைப்பதில்லை. விவசாயிகளிடமிருந்து லிட்டர் ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்படும் பால் நுகர்வோருக்கு ரூ.41-க்கு விற்கப்படுகிறது. 30 சதவீத லாபத்துக்கு பால் விற்பனை செய்யப்பட்டாலும், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்கப்படுவதில்லை.
பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 வாரங்களாக பால் பணம் வழங்கப்படவில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை பால் உற்பத்தியாளர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு ஒரு முறை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை அந்த கூட்டம் நடத்தப்படவில்லை.
சார்-ஆட்சியர்: கோரிக்கைகளை மனுவாக அளித்தால், அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.
வரதராஜன்: சேந்தமங்கலம் வட்டம், பெரியகுளம் ஏரியில் நீர் மூழ்கும் பகுதி சுமார் 28 ஏக்கர் உள்ளது. கரையின் அருகில் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள் அருகில் உள்ள ஏரிக்குச் சொந்தமான இடத்தில் மண்ணைக்கொட்டி சமன்செய்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பல முறை நேரில் வலியுறுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவே, தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சார்-ஆட்சியர்: பெரியகுளம் ஏரியை நேரடியாக ஆய்வு செய்து, ஏரியை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை எடுக்க நடவடிக்கையெடுக்கப்படும்.