ஈரோட்டில் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் செப். 19-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.சந்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரிய உத்தரவின்படி, ஈரோடு மண்டலத்தின் தலைமைப் பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிற மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் உடனடியாக தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனை வழங்கவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நிகழாண்டு மூன்றாம் காலாண்டிற்கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் செப்டம்பர் 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு ஈவிஆர் சாலையில் அமைந்துள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடைபெறுகிறது.
எனவே தகுதியானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். தனிநபர் மனுக்கள், ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகள் காலையிலேயே பெற்றுகொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.