மணல் கடத்தலில் மாணவர்கள் ஈடுபடுத்துவதைக் கண்டித்து, நாமக்கலில் பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் பி. முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என். பி.சத்தியமூர்த்தி, மாவட்டச் செயலர் ஏ.ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஆர்.வரதராஜன் வரவேற்றார்.
காவிரி ஆற்றில் மோகனூர், பேட்டபாளையம், குன்னிபாளையம், பாலப்பட்டி, மணப்பள்ளி, நன்செய் இடையாறு, அணிச்சம்பாளையம்,கருக்கம்பாளையம், வேலூர், பொன்மலர்பாளையம், கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் பணத்தாசை காட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களை மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், அவர்களது கல்வி உள்ளிட்ட எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காவிரி ஆற்றில் மிகத் துணிகரமாக நடைபெற்று வரும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
கோட்டப் பொறுப்பாளர் ஏ.சி.முருகேசன், நிர்வாகிகள் பாண்டியன், ஏழுமலை, பெரியசாமி, சுதிர் முருகன், பிரணவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.