பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏல சந்தையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வாழைத்தார்களின் விலை உயர்ந்தது.
பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும்,சேலம், கோவை, ஈரோடு,கரூர்,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினம்தோறும் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தைக்கு தங்களது உற்பத்தியான வாழைத்தார்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வசதியும் உள்ளது.
கடந்த வாரம் சுமார் 600 வாழைத்தார்கள் ஏலத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300 வரையிலும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைலாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு ஏலம் போனது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுமார் 1,300-க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500 வரையிலும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், பச்சைலாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.12-க்கு ஏலம் போனது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.