ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலன் காக்கக் கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளன துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் லட்சுமணன், செயலாளர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
இதில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினமும் ரூ. 380 கூலி வழங்க வேண்டும். பகுதிநேரப் பணியாளர்களை அனைத்துப் பிரிவு அலுவலகங்களுக்கும் அனுமதித்திட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்து பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதுமிருந்து மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.