குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, குமாரபாளையம் அரசு மருத்துமனையின் மருத்துவ அலுவலர் பாரதி தலைமை வகித்தார். குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் வரவேற்றார். காவல் ஆய்வாளர் தேவி பேசுகையில், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைகளுக்குள்பட்ட பகுதியில் நிகழும் விபத்துகள் குறித்து காவல் நிலையத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்தில் காயம்பட்டோரை அரசு மருத்துவமனைக்கு முதலில் கொண்டு செல்ல வேண்டும்.
இல்லையெனில், காயம்பட்டவரின் விருப்பத்துக்கேற்ப தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம். அவரச ஊர்தி ஓட்டுநர்கள், காயம்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். விபத்தில் காயம்பட்டோரிடம் அதிக வாடகை கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது. ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் வாகனத்தின் உரிமங்களை உரிய கால அளவில் புதுப்பிப்பதோடு, வாகனத்தின் அனைத்து இயக்கங்களும் சரியாக உள்ளனவா என அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதில், குமாரபாளையம் காவல் எல்லைக்குள்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.