முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110-வது பிறந்த தினத்தை முன்னிட்டு குமாரபாளையத்தில் அதிமுக, திமுக சார்பில் அவரது உருவச்சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
குமாரபாளையம் நகர அதிமுக செயலர் ஏ.கே.நாகராஜன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாகச் சென்ற அதிமுகவினர், நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகரத் துணைச் செயலர் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சேகர், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் கே.எஸ்.பாலசுப்பிரமணி தலைமையில் தனியே ஊர்வலமாகச் சென்ற அதிமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
குமாரபாளையம் நகர திமுக செயலர் கோ.வெங்கடேசன் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற திமுகவினர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர். திமுக தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜேகேஎஸ்.மாணிக்கம், மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காட்டூரில் நகரச் செயலர் உதயராஜ் தலைமையில் கட்சியினர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.