கொல்லிமலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொல்லிமலை செம்மேட்டில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கமும், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து தி..மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது, வன நில உரிமைச் சட்டம் 2006-இன்படி வனங்களைச் சார்ந்து வாழ்வோருக்கு 10 ஏக்கர் நிலமும், நிலமற்ற தரைப்பகுதிகளில் வாழும் பழங்குடிகளுக்கு, முதல்வரின் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலமும் உடனடியாகத் தமிழக அரசு வழங்க வேண்டும், மலைப் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்யும் மக்களுக்கு பட்டா வழங்குவதை தடை செய்யும் அரசனையை நீக்கி உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் தங்கராஜ், செயலர் நேரு, விவசாய அணி தலைவர் காளி, மாவட்ட நிர்வாகிகள் சின்னுசாமி, கார்த்திக், பாலசுப்பரமணியம், மாதியழகன், பசுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.