ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சுழற்சி முறையில் ஆடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டுக் குட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது .
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஏழை பயனாளிகள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு சுழற்சி முறையில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆட்டுக் குட்டிகளை பெறும் பயனாளிகள், அதனை வளர்த்து அதன் இனப்பெருக்கத்தின் மூலம் கிடைக்கும் குட்டிகளில் ஒரு ஆட்டுக்குட்டியை மீண்டும் ரோட்டரி சங்கத்துக்கு வழங்க வேண்டும். இதிலிருந்து ஆண்டுதோறும் புதிய ஏழை பயனாளிகள் கிராமந்தோறும் தேர்வு செய்யப்பட்டு ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்டுக் குட்டிகள் வழங்கப்படும்.
இதனையடுத்து தேங்கல்பாளையம் எம்ஜிஆர் காலனி பகுதியில் நடப்பு ஆண்டில் 10 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு சுழற்சி முறையில் ஆட்டுக் குட்டிகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ரோட்டரி சங்கத் தலைவர் (தேர்வு) ஆர்.அம்மன் ரவி, செயலர் எஸ்.முரளி, கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் சிட்டி ஆர்.வரதராஜன், என்.சுரேந்திரன், துளசிராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.