நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை புல், பூண்டுகளில் தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் மரம், செடி, கொடிகள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில், அவ்வப்போது வளாகத்தில் உள்ள காய்ந்த செடிகள் தீப்பிடித்து எரியும்.
அதுமட்டுமின்றி, ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவோரில் சிலர் புகைப்பிடித்து விட்டு தீயை அணைக்காமல் காய்ந்த சருகுகளில் போட்டு விட்டுச் செல்வர். இதனாலும் அங்கு தீப்பிடிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் தீப்பிடித்து எரிந்ததால், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் மணியரசன் தலைமையில் வந்த வீரர்கள் தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். வாகனங்களும், ஆவணங்களும் நிறைந்துள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அடிக்கடி பற்றி எரியும் தீயால், அலுவலர்களும், பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.