மலைக் கிராமங்களுக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்படும் வாக்கு இயந்திரங்கள்

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கீழுர், கடமலை மலைக் கிராமங்களுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல்

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கீழுர், கடமலை மலைக் கிராமங்களுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் தலைச்சுமையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள, ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போதுமலை மலைக் கிராமம் உள்ளது. அதையொட்டியுள்ள பகுதியான கீழுர், கடமலை மலைக் கிராமங்களுக்கு, ஒவ்வோர் தேர்தலின்போதும் தலைச்சுமையாகவே வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும்.
இக்கிராமங்களுக்கு, வெண்ணந்தூர் அடிவாரப் பகுதியில் இருந்து புறப்பட்டால் சென்று சேர குறைந்தபட்சம் 4 மணி நேரமாகும். வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதியில்லாததால் கரடு, முரடான பாதையிலேயே செல்ல வேண்டும். இதனால் ஆண் ஊழியர்கள் மட்டுமே அங்கு தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். இம்முறை விவிபேட் இயந்திரமும் கொண்டு செல்ல வேண்டியதுள்ளதால், கூடுதல் ஊழியர்களை நியமிக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
மேலும், செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டால் தான் கீழுர், கடமலை கிராமங்களுக்கு சென்று அலுவலர்கள் அங்கு தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இதனால் ஏற்கெனவே அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கழுதைகள் மீது வாக்கு இயந்திரங்களை கட்டி எடுத்துச் செல்வதற்கு முயற்சிக்கலாம். இல்லையெனில் தலைச்சுமையாகவே கொண்டு செல்லப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.மேலும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பெண்களுக்கென ஒவ்வோர் தொகுதிக்கும் ஐந்து வாக்குச் சாவடிகள் வீதம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com