ராசிபுரம் பகுதியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜியை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் வீர.ஆதவன் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் பங்கேற்று துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ராசிபுரம் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் நகரப் பொருளாளர் மு.ராமகிருஷ்ணன், நகர துணைச் செயலர் இள.விஜயகுமார், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நகர அமைப்பாளர் து.பூபதி, ஜி.கே.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமமுக சார்பில்...
இதே போல் ராசிபுரம் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் நாமக்கல் வேட்பாளர் பி.பி.சாமிநாதனை ஆதரித்து, கட்சி நிர்வாகிகள் பலர் திறந்த ஜீப்பில் சென்றவாறு நகரின் பல்வேறு இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். ராசிபுரம் வி.நகர், மேட்டுத்தெரு, நாமக்கல் சாலை, ராமசாமி தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட கட்சியினருடன் திரளான பெண்களும் சென்றனர்.