பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் உயிரிழந்தார்.
மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி பாவடி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (50). இவர் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் புதன்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் செல்வதற்காக நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பரமத்தி வேலூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து முருகன் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.