ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதனைச் சுற்றி வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, தனியார் அலுவலகங்கள் உள்ள நிலையில், இந்தப் பகுதியில் குப்பைகள் குவித்து வைக்கப்படுவதால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. பிரதான சாலையான இப் பகுதியில் தேக்கி வைக்கப்படும் குப்பைகள் சுற்று வட்டாரப் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால், அங்கு குப்பைகள் தேக்கி வைப்பதைத் தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இப்பகுதியில் குப்பைகள் தேங்கி வைக்கப்படுவதால், ஏற்படும் பாதிப்பை தடுத்து, அப்பகுதியின் தூய்மையை பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு வலியுறுத்தியுள்ளார்.