ஆடிப் பண்டிகை: நாட்டுக் கோழிகள், மீன் விற்பனை அதிகரிப்பு

பரமத்தி வேலூரில்  ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் நாட்டுக்கோழிகள் மற்றும் மீன் விற்பனை அதிகரித்தது.  

பரமத்தி வேலூரில்  ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் நாட்டுக்கோழிகள் மற்றும் மீன் விற்பனை அதிகரித்தது.  
 பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதியில் சண்டைக்கோழிகள் மற்றும் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும் கோழிகள் வீடு, தோட்டங்களில் அதிகளவில்  வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை  பரமத்தி வேலூரில் நடைபெற்ற நாட்டுக்கோழிச்சந்தைக்கு  பரமத்தி வேலூர்,  மோகனூர்,  கரூர், பாளையம்,  நாமக்கல்,  திருச்செங்கோடு,  ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டிவரப்பட்டிருந்தன.  ஆடி 18 பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டதால் பலர் வீடுகளில் அசைவ உணவுகள் சமைக்க முடியாத சூழ்நிலையில்  ஞாயிற்றுக்கிழமையையொட்டி அதிகாலை முதல் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரத் தொடங்கினர்.  பெருவடை, கீரி, கடகநாத்,  குருவுக்கோழி,  அசில் கருஞ்சதை மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிளிமூக்கு, கிரிராஜா  உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இங்குள்ள   நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் சென்றனர்.   தரமான நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும்  விற்பனையாகின.   சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல்கள்  ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.  புதுமணத் தம்பதியினருக்கு விருந்து வைப்பதற்காகவும்,  ஆடிப்  பண்டிகையை முன்னிட்டும்   அதிக அளவில் நாட்டு கோழிகளை வாங்கிச்  சென்றனர். இதனால் நாட்டுக் கோழிகளின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.   அதேபோல் பரமத்திவேலூர் தினசரி மீன் சந்தையிலும் விற்பனைக்காக அதிகளவில் மீன்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.  இதில் ஜிலேபி கிலோ  ரூ.120,   ரோகு  ரூ.160 , பாறை மீன் ரூ.160, கடல் மீன் வகைகளான வஞ்சிரம் ரூ.750, கடல் பாறை ரூ.450, நண்டு ரூ.300, இறால்  மீன் ரூ.450-க்கும் விற்பனையாகின.   கடல் மீன்களின் வரத்து அதிக அளவில் இல்லாததால் பொதுமக்கள் ஆறு மற்றும் பண்ணைகளில்  வளர்க்கப்படும் மீன்களை வாங்கிச்  சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com