நாமக்கல் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க ஏழாவது மாநாடு, ராசிபுரத்தில் இரண்டு நாள்கள் நடைபெறுவதையொட்டி, நாமக்கல்லில் கொடிப் பயணம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஏ.ரங்கசாமி பயணத்தை தொடக்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. முன்னாள் செயலர் வி.சீனிவாசன், முன்னாள் மாவட்டத் தலைவர் சி.மோகன், சுமைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் என்.பி.ராஜன் ஆகியோரின் நினைவாக, அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொடங்கிய ஊர்வலம் ராசிபுரத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தின்போது, மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். தொழிலாளிகளுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.