மழை வேண்டி, நாமக்கல் அருகே 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி வருண யாகத்தை திங்கள்கிழமை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையின் கிழக்கு அடிவாரப் பகுதியில் உள்ள முள்ளுக்குறிச்சி, கூனத்தாங்கல், காரியப்பட்டி, மலையாளப்பட்டி, தோல்மண்டி, பெரியகோம்பை உள்ளிட்ட 21 கிராமங்ளைச் சேர்ந்தோர் இணைந்து யாகத்தை நடத்தினர்.
இதையொட்டி, 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் யாகம் நடத்திய பின்னர், மழை பெய்ய வேண்டி பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் அமர்ந்து வருண பகவானை நோக்கி வேதமந்திரங்களை ஒலித்தனர். இதையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து யாக ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கூறியது; -
நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கும் கீழே சென்றதால் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுள்ளன. தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விவசாயத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் யாகம் நடத்தினோம் என்றார்.