நாமக்கல்லில் அரசு தொழில் நுட்பக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆட்டோ நகர் சங்கத்தின் 29-ஆவது பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.வாங்கிலி தலைமை வகித்தார். ஆட்டோ நகர் சங்க தலைவர் வி.பழனிசாமி, செயலாளர் வி.சுப்பிரமணியன், பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில், ஆட்டோ நகர் தொழிற்பேட்டை அமைக்கத் தேவையான சாலை வசதி, மின்சாரம், மின்விளக்கு, பேருந்து, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் ஏற்படும் மாசுவைத் தவிர்க்க, ஆட்டோ நகரில் பணிமனைகள் அமைக்க ஒத்துழைப்புத் தர வேண்டும். மேலும், அங்கு லாரிகள் நிறுத்துமிடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாமக்கல்லில் தற்போது உள்ள பேருந்து நிலையம் இட நெருக்கடியில் உள்ளதால், புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். மாவட்டத் தலைநகர் என்ற அடிப்படையில், அரசு தொழில் நுட்பக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஆட்டோ நகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.