ராசிபுரத்தில் நடைபெற்றுவரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் எஸ்.மணிமாறன் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் ஏ.டி.பாலகுமாரராஜூவிடம் அளித்த மனுவின் விவரம்: ராசிபுரம் நகரில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளன.
இதனால் பொதுமக்கள் பேராபத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நகரில் வி.நகர் பகுதியில் பெரும் பள்ளங்கள் உளளன. இது குறித்து எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சியில் முறையிட்டும் பலனில்லை. மேலும், நகரில் சாக்கடை நீர்த் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.