ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல்-மோகனூர் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆவணி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பின்னர், மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, செவ்வரளி, மனோரஞ்சிதம் மற்றும் மல்லிகை மலர்களால் சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. பால தண்டாயுதபாணி சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மேலும், வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர் உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ் விழாவில், நாமக்கல் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.