பண்ணைகளைச் சுற்றிலும் ஈரம் காணப்பட்டால் சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது; வரும் நான்கு நாள்களுக்கும் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 10 மில்லிமீட்டர் அளவில் பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தென் மேற்கிலிருந்து வீசக் கூடும். வெப்பநிலையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக 89.6 டிகிரியும், குறைந்தபட்சம் 73.4 டிகிரியுமாக இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: வரும் நாள்களில் தென் மேற்குப் பருவமழையின் மிதமான தாக்கம் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் இருக்கும். மேகமூட்டம் காரணமாக. பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் குறைந்து காணப்படும். இனிமேல் காற்றின் வேகம் மட்டுப்பட்டே வீசும். மேலும், பண்ணைகளில் ஈரமான சுற்றுப்புறம் வேண்டாம். இதன் காரணமாக எருக்களில் ஈரம் உண்டாகி, சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடும், ஈக்கள் பெருகுவதற்கும் வழிவகுத்து விடும். உடனுக்குடன் எருக்களின் ஈரத்தன்மையைக் குறைக்கும் வழிகளான தீவனத்தில் புரோபையாடிக்ஸ் எனப்படும் நன்மை பயக்கும் பாக்டீரியா கலவையை தீவனத்தில் பயன்படுத்துதல். தீவனத்தில் அப்ளாநச்சு குறைவாக இருக்குமாறும், தகுந்த நொதிக் கலவையைப் பயன்படுத்தும் வகையிலான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், எரு ஈரமற்று இருப்பதுடன். அடுத்து வரும் ஈக்களின் உற்பத்திக் காலத்தை பிரச்னையின்றி கடக்க உதவும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.