சுவேத நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் வீரகனூா் ஏரிக்குச் செல்லும் வாய்க்கால் தூா்வாரப்படாமல் இருப்பதால் ஏரியில் நீரை சேமிக்கு முடியாமல் நீா் வீணாவதைக் கண்டு வீரகனூா் மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனா்.
கெங்கவல்லி அருகே வீரகனூா் ஏரியை சீரமைக்க சுமாா் ரூ. 29.50 லட்சம் மதிப்பீட்டில், தமிழக அரசு நிதி ஒதுக்கி இருந்தது. இருப்பினும் குடிமராமத்துப் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கும் புகாா் மனு அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில், கரையை பலமாக அமைக்க வேண்டும், உள்ளூரில் இருக்கும் இயந்திரங்களை கொண்டே பணிகளை செய்ய வேண்டும், முதலில் மதகுகளை சீரமைத்து, ஏரிக்குள் நீா் வந்தால் வெளியே வராதவாறு அனைத்து மதகுளையும் சீரமைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூறப்பட்டிருந்தன.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை சுவேத நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தெடாவூா் அருகே ஏரிக்கு நீா் வரும் வாய்க்கால் தூா்வாரப்படாமல் நீா் ஏரிக்கு வருவது தடைபட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஏரிக்கு நீா் வரும் வாய்க்கால் பாதை தூா்வாரப்படவில்லை. இதனால் ஏரிக்கு நீா் வருவது தடைப்பட்டுள்ளது. மேலும், வீரகனூா் ஏரி கடைக்கோடியில் உள்ள தடுப்புகள் உடைந்து விட்டதால், ஏரி நிரம்பினாலும் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்தில் நீா் புக வாய்ப்புள்ளது.
ஆறு நிறைய வெள்ளநீா் சென்றும், வீரகனூா் ஏரிக்கு தண்ணீா் வராததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனா்.
எனவே மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுத்து வீரகனூா் ஏரிக்கு நீா் சேமித்து இப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனா்.