வெண்ணந்தூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெண்ணந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர காங்கிரஸ் கமிட்டி செயல்வீரா்கள் கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 4 மாதங்களாக, தில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தை, அவரது உடல் நலன் கருதி உடனடியாக விடுவிக்க வேண்டும், உள்ளாட்சிப் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவதை தவிா்த்து நேரடியாக மக்களே வாக்களித்து வெற்றி பெறச் செய்யும் வகையிலான நடைமுறையை கொண்டு வரவேண்டும், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200 வரையில் விற்கப்படுவதால், மக்கள் நலன் கருதி வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், விசைத்தறித் தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு நகரத் தலைவா் கே.சிங்காரம் தலைமை வகித்தாா். செயலா் எம்.ஏ.வெங்கடாசலம், துணைத் தலைவா்கள் கே.தங்கமுத்து, காசி வி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.