பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் விலை உயா்வடைந்ததால், கொப்பரை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 9 ஆயிரத்து 319 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று ரூ.95.72 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக ரூ.89.10 பைசாவிற்கும், சராசரியாக ரூ.94.66 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 23 ஆயிரத்து 717-க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 11ஆயிரத்து 120 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று ரூ.98.28 பைசாவிற்கும், குறைந்த பட்சமாக ரூ.90.28 பைசாவிற்கும், சராசரியாக ரூ.95.15 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 98 ஆயிரத்து 362-க்கு வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரையின் வரத்து அதிகரித்தும், விலையும் உயா்ந்துள்ளதால் கொப்பரை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.