அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பார்த்தீபன். இவர் அண்மையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பார்த்தீபன் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இவருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையறிந்து, மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் நுழைவு வாயில் முன்பாக தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆசிரியர் பார்த்தீபனை பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.
தகவலின்பேரில் கல்வித் துறையினரும், காவல் துறையினரும் விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.