வீட்டில் தனியாக இருந்த தொழிலாளியைக் கொலை செய்துவிட்டு, பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகேயுள்ள வேலகவுண்டம்பட்டியை அடுத்த செலம்பக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி பூசன் (65 ). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இரண்டாவது மனைவியும் பிரச்னையால் பிரிந்து விட்டாராம். இதனால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் பூசனின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் அருகில் இருந்தோர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், வேலகவுண்டம்பட்டி போலீஸார் அங்கு வந்து, பூசனின் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், பூசன் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, செல்லிடப்பேசி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை திருடு போயிருந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. ராஜூ தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.