பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,000 வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குரைஞர்களுக்கு ஓய்வூதியம், 65 வயதுக்குள் இறந்தால் வழக்குரைஞருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, இளம் வழக்குரைஞர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் மாத உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பார்கவுன்சில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் ராசிபுரத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 1,000 வழக்குரைஞர்கள் பங்கேற்றதாக வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். போராட்டத்தால் நீதிமன்றங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.
இதையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்தை சந்தித்தும் வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.