வாரம் இருமுறை காவிரி குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தி உள்ளது.
வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. நகரத் தலைவர் கே.சிங்காரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கே.தங்கமுத்து, வி.காசிபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பி.கே.செங்கோடன் வரவேற்றார். இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
வெண்ணந்தூர் பேரூராட்சியில் ஆறு மாதங்களுக்கு முன்பு குடிநீர் கட்டணம் மாதம் ரூ.80-இல் இருந்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டது. 2018 - 19-ஆம் ஆண்டுக்கான வீட்டுவரி 50 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
கடந்த 1.2.2019 முதல் சேவை வரி என ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வாரம் இருமுறை குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி 4-ஆவது வார்டு செக்கான்காடு பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் எம்.கந்தசாமி, எஸ்.தங்கவேல், டி.ஆர்.சுப்பிரமணியம், வி.எஸ்.மோகன், டி.நடராஜன், கே.கோபிநாத், கே.எம்.முனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.